Friday, July 24, 2009

பணம் இனிது! பொருள் இனிது! அதை விட இனிது மழலை.

என் பதிவில் எழுதியது.



மகனுக்கு வயசு 3 ஆக இன்னும் சில மாதங்கள் இருக்கு.. சேட்டையும் பேச்சும் அதிகமா இருக்காம்... :) இன்னும் ஸ்கூலுக்கு அனுப்பலை. இப்ப அவங்க அம்மாவோட நெல்லை மாவட்டத்தின் ஒரு கடைக் கோடியில் இருக்கான். கொஞ்ச நாள் கழிச்சு பிரிகேஜி மாதிரி அனுப்பலாமா? இல்ல மொத்தமா வரும் 2010 ஜூனில் எல்கேஜியில் சேர்க்கலான்னு யோசனையில் இருக்கோம்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$

அங்க வீட்டுக்கு பக்கத்தில் மசூதி இருக்கு.. காலையும், மாலையும் அங்கே அரபிப் பாடம்(மதரஸா) நடக்கும். தினமும் சும்மாவாச்சியும் போய்ட்டு வருகிறான். சில நேரங்களில் போக அடம் பிடிக்கின்றான்.. அப்படித் தான் ஒரு மதரஸாவுக்கு போகாத நாளில் மதரஸாவில் பாடம் சொல்லித் தருபவர் (ஹஜரத்) தெருவில் இவனைப் பார்த்து “ஏன், காலையில் மதரஸாவுக்கு வரல.. நாளைக்கு வரல அடி பிச்சிடுவேன்” என்று சொல்லி இருக்கிறார்.. இவன் முழிச்சு இருக்கான். “நாளைக்கு ஒழுங்கா வரனும் என்ன?” என்று அவர் சொல்ல இவன் “ எங்க மாமாகிட்ட சொல்லி, உங்க தோலை உரிச்சு, ஜன்னலில் கட்டி தொங்கப் போட்ருவேன்” என்று சொல்லி இருக்கான்... :( ஹஜரத் வீட்டில் வந்து (ஜாலியாக) கம்ப்ளைண்ட் பண்ணி இருக்கார். மற்றவர்கள் சொல்வதை புரிந்து அதே பாணியில் பதில் சொல்லும் பழக்கம் அதிகமாகி விட்டது.. கொஞ்சம் பெரிதானால் புரியும் என்று நினைக்கிறேன்.

*******************************************************************

ஒருநாள் வீட்டு மொட்டை மாடியில் இருந்து மழைத் தண்ணீர் விழும் பைப்பில் இருந்து தண்ணீர் கொட்டி இருக்கு.... மேலே போய் பார்த்தால், மேல்நிலைத் தொட்டியின் மூடியைத் திறந்து அதனுள் ஒரு PVC ஹோசைப் போட்டு, தண்ணீரை உறிஞ்சி மொட்டை மாடிக்கு தண்ணீர் தெளித்துக் கொண்டு இருந்தானாம்... இதே போல் ஒருநாள் வீட்டில் நின்ற பைக்கில் பெட்ரோல் டேங்கைத் திறந்து அதிலும் ஹோசை நுழைக்க முயலும் போது கையும் களவுமாக பிடிபட்டு இருக்கிறான்.

**********************************************************************

பாட்டி(அவனது அம்மம்மா) தண்ணீர் அள்ளிக் (எங்க ஊரில் மெத்தி) கொடுக்கச் சொன்னால் நீங்களே போய் தண்ணி அள்ளிக்கங்க என்று சொல்கிறானாம்.
“ஒரு உதவி கூட செய்ய மாட்டியா” என்று கேட்டால் “என்னை செரப் படுத்தாதீங்க” என்று சொல்கின்றானாம். (செரப்படுத்ததல் என்றால் தங்கமணி ஊரில் கஷ்டப்படுத்துதல்) இதே போல் சாப்பாடு ஊட்டும் போது அவரை கஷ்டப்படுத்தக் கூடாதாம்.

இவையெல்லாம் அவ்வப்போது வரும் புகார்களின் தொகுப்பு.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

அங்கு ஆடு வளர்க்கிறார்கள்.. மதிய வேளைகளில் ஆடுகள் தண்ணீர் குடிக்க வீட்டுக்கு வரும். வழக்கமாக வரும் வளவு(எங்க ஊரில்கொல்லைப் புறம்)க்கான பாதை மூடி இருக்கும் என்பதால் வீட்டுக்கு வெளியே நின்று கத்தும்.. உடனே இவன் வெளியே போய் “கத்தக் கூடாது .. அப்பா இப்ப வந்துடுவாங்க.. வந்து உங்களுக்கு கஞ்சி வைப்பாங்க” என்று ஆடுகளுடன் பேசிக் கொண்டு இருப்பானாம். (அப்பா என்பது தாத்தா)

**************************************************************

சமீபத்தில் தங்கமணிக்கும் மகனுக்கும் நடந்த உரையாடல்

மகன் : அம்மா, வயிறு ஏன் பெரிசா இருக்கு?

தங்கமணி : வயித்துக்குள்ள நம்ம குட்டி பாப்பா இருக்கு.

மகன் : குட்டிப்பாப்பா எப்பமா வெளியே வரும்?

தங்கமணி : இப்பதானே வளருது.. சீக்கிரமா வந்து உன்னோட விளையாடும்

மகன்: நான் வேணா வயித்துக்குள்ள போய் பாப்பா எப்படி இருக்குன்னு பார்த்துட்டு வரவா?


**********************************************************************

5 comments:

ராமலக்ஷ்மி said...

அண்ணனாகப் போகிற சந்தோஷத்தில் அட்டகாசமாய் போஸ் கொடுத்திருக்கிறார் ஜூனியர்! வாழ்த்துக்கள் தமிழ் பிரியன்!

Jaleela Kamal said...

ரொம்ப சூப்பரான போஸ் வேட்டிய வரிஞ்சி கட்டி கொண்டு பிள்ளைகளின் ஓவ்வொரு வளர்சியும் ரசிக்க தகுந்தது.

வல்லிசிம்ஹன் said...

பாப்பா வந்து விட்டதா தமிழ் பிரியன். வாழ்த்துகள்மா. பையன் மகா ஸ்வீட்.

பனித்துளி சங்கர் said...

கலக்குறீங்க போங்க !

Unknown said...

இன்னைக்குதான் உங்களை பையனின் போட்டோக்கள் பார்த்தேன்..
மிகவும் குறும்புக்கார ஆள்...